Saturday, November 14, 2015

பூனையும் விருதைத் திருப்பிக்கொடுத்தலின் அரசியலும்

விருதைத் திருப்பிக்கொடுத்தலின் அரசியலைப்  பற்றி இன்று புதிய தலைமுறையில் நடந்த விவாதத்தை சிறிது நேரம் காண நேர்ந்தது. \

நிற்க.

கதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு ஊர்ல ஒரு பூனை இருந்தது. பூனைத் தன் இயல்பில் மிகவும் பயந்தது என நமக்கு நன்றாக தெரியுமல்லவா? ஒருநாள் ஒரு பையன்  தன் தோழர்களோடு சேர்ந்து கொண்டு  அந்த பூனையைக் கண்ணில்பட்ட போதெல்லாம் தாக்கத் தொடங்கினான்.  பொழுது போகவில்லையென்றால் அந்தப் பூனையைத் தேடி, அது கண்ணில்படுகிறபோது அடித்துத் துரத்தவும் செய்தான்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற பூனைகள் அவனிடம்  "உன் சோறு எங்களுக்கு வேண்டாம்" என்று அவன் போட்ட சோற்றை அவனிடமே திருப்பிக் கொடுக்கும் விதமாக அவன் வீட்டிலிலும், அவன் புழங்குகிற இடங்களிலெல்லாம் கக்கிவைத்தன. கோபம் கொண்ட அந்த பையன் தன் தவறை உணராமல், ஊர் பெரியவர்களிடம் சென்று  "இந்த அறிவு கெட்ட பூனைகள் செய்வதைப் பாருங்கள்.  எவ்வளவு முட்டாள்தனமானது? ஏன் இப்படிச் செய்கின்றன? அவைகள் வேண்டுமானால் என் அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ சொல்லலாம் அல்லது அவர்களிடம் போய்க் கக்கிவைக்கலாம் அல்லவா? என அப்பூனைகளை கடிந்து கொண்டு இவற்றையெல்லாம் இந்தப் பூனைகள் வேணுமென்றே என் பெயரைக் கெடுப்பதற்காகச்  செய்கின்றன", என புலம்பினான்.

சில பின்குறிப்புகள்...

பொதுவாக பூனைத் தன் இயல்பில் நாம் அதை தாக்க முனைகின்றபொழுது பயந்து, தப்பிப்பதற்கான வழியை தேடும் இயல்பு கொண்டது. ஆனால் அதுவே தப்பிக்க வழியில்லாத ஒரு மூலையில் சிக்கிக்கொள்கின்ற பொழுது திருப்பி தாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.  அத்தகையச் சூழலில் பூனையைத் துரத்தி துரத்தி அடித்தவன், பூனைப் பயந்து ஓடுவதை நிறுத்திவிட்டு வேறு வழியின்றி திருப்பி தாக்குவதை  ஒத்துக்கொள்ள முடியாமல், இந்த பூனை வன்முறையில் இறங்குகிறது. அறவழியில் போராடலாம் அல்லவா? அல்லது இப்பூனை(கள்) தங்கள் நகங்களை நறுக்கிவிட்டு வெறும் கால்களால் தாக்கலாம் அல்லவா... எனக்கு வலிக்கிறதே... என்று போதித்தானாம்.

பின் குறிப்புகளுக்கான முன்குறிப்பு....

பாதிக்கப்பட்டவன் தன்னைக் காத்துக்கொள்ள, தனக்கான நியாயத்தைப் பெற்றுக்கொள்ள என்ன ஆயுதம் ஏந்தவேண்டும் என்பது பாதிக்கப்பட்டவனின் உரிமையாகும். அதுவே அவனுக்கான அறமும் ஆகும்.